வேளாண் எந்திரம்-கருவிகள் வாடகை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


வேளாண் எந்திரம்-கருவிகள் வாடகை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 10 Nov 2019 11:00 PM GMT (Updated: 10 Nov 2019 7:13 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு மாநில அரசு வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை வாங்க இயலாத வேளாண் பெருமக்களின் நலன்கருதி, வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கும் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஊக்குவித்து வருகிறது. நடப்பாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற்று பயனடைய ஏதுவாக வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வாடகை மையம் அமைக்க 40 சதவீதம் மானியம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இவ்வாடகை மையங்களுக்கு தேவைப்படும் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை அந்தந்த பகுதிகளில் சாகுபடியாகும் பயிர்கள், மண்ணின் தன்மை, வேலையாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றினை கருத்தில் கொண்டு இம்மையங்களை நடத்த முன்வருபவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்களை அமைக்க முன்வருபவர்கள் வேளாண்மை பொறியியல் துறையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களின் எந்திரங்களில் இருந்து தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம்.

மூதுரிமை அடிப்படையில்

இவ்வாறான மையங்களை அமைக்க விரும்புவோர் முதலில் அதற்குரிய விண்ணப்பத்தினை புதுக்கோட்டை மாவட்டத்தின் வருவாய் கோட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவ்வாறு வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தின் உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மூதுரிமை பதிவேட்டில் பதியப்படும். உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களுக்கு உரிய நிதி அளிக்கப்பட்டவுடன் அவ் அலுவலகம் மூலமாக மூதுரிமை அடிப்படையில் அம்மையங்களை நடத்த விண்ணப்பித்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

விவசாய குழுக்கள் தமக்கு தேவையான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் மொத்த தொகையினை சம்பந்தப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள முகவர்களிடம் வரைவோலையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயரில் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய வரைவோலையின் நகலினை உதவி செயற்பொறியாளர் வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் அளித்தவுடன், வேளாண் பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் முகவருக்கு உரிய வழங்கல் ஆணை வழங்கப்பட்டு அம்மையத்துக்கு முகவரால் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் வழங்கப்படும்.

மானிய இருப்பு நிதி

மொத்த மானிய தொகையில் பொதுப் பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், ஆதி திராவிட பிரிவினருக்கு ரூ.3 லட்சமும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பயனாளியின் மானிய இருப்பு நிதி கணக்கில் 4 ஆண்டுகளுக்கு இருப்பில் வைக்கப்படும். மீதித்தொகை பயனாளியின் சேமிப்பு வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 4 ஆண்டுகளுக்கு பின் பயனாளிக்கு மானியத்தில் வழங்கப்பட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சரிபார்த்த பிறகு மானிய இருப்பு தொகை பயனாளியின் வங்கி கணக்கில் திரும்ப வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story