கள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனை: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


கள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனை: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 10 Nov 2019 10:30 PM GMT (Updated: 10 Nov 2019 8:03 PM GMT)

கள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் செந்தில்(வயது 27). தொழிலாளி. இவர் நேற்று தனது தாயார் அய்யம்மாளுடன்(55) ஒரு மோட்டார் சைக்கிளில் காரனூர் வழியாக கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார். கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்த செந்திலை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். உடனே செந்தில் பிரேக் போட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து இருந்த அய்யம்மாள் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அய்யம்மாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி செந்தில் தனது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் உலகங்காத்தான் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதால் தான் அய்யம்மாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்ததாக கூறியும், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டித்தும் திடீரென மருத்துவமனை முன்பு கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story