ஓமலூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு


ஓமலூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
x
தினத்தந்தி 10 Nov 2019 10:45 PM GMT (Updated: 10 Nov 2019 8:09 PM GMT)

ஓமலூர் அருகே பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலியானார்.

ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் நடராஜ். டிரைவர். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு சவுந்தரராஜன்(வயது 16) என்ற மகனும், திலோத்தம்மாள் என்ற மகளும் இருந்தனர். சவுந்தரராஜன் கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள கோவிந்தகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இருவரும் நண்பர்கள். இந்தநிலையில் நந்த குமாரின் அண்ணன் மனைவிக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக சவுந்தரராஜன் கஞ்சநாயக்கன்பட்டி கோவிந்தகவுண்டனூர் பகுதிக்கு சென்றார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நண்பர்கள் இருவரும் காலை 9 மணி அளவில் அங்குள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர். முதலில் ஒரு கிணற்றில் குளித்துவிட்டு பின்னர் அருகில் இருந்த மற்றொரு கிணற்றுக்கு குளிக்க சென்றனர். 60 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 40 அடி அளவிற்கு தண்ணீர் இருந்தது முதலில் நந்த குமார் கிணற்றில் குதித்தார். இதையடுத்து சவுந்தரராஜன் குதித்த போது கிணற்றில் இருந்த சுவற்றில் மோதினார்.

வாக்குவாதம்

இதில் உடலில் பலத்த காயம் அடைந்து ரத்தம் வழிந்த நிலையில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் மேலே ஏறி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சிய பிறகு மாணவனை மீட்க முடிவு செய்யப்பட்டது. கிணற்றில் இறங்காமல் தீயணைப்பு படை வீரர்கள் காலதாமதம் செய்வதாக கூறி அவர்களுடன் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தண்ணீரை உறிஞ்சிய பிறகு கிணற்றுக்குள் இறங்கி மதியம் 2 மணி அளவில் சவுந்தரராஜனின் உடலை வீரர்கள் மீட்டனர். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற பள்ளி மாணவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் காருவள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story