திட்டக்குடி அருகே, திருமண வீட்டுக்கு வந்த பெண் திடீர் சாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்


திட்டக்குடி அருகே, திருமண வீட்டுக்கு வந்த பெண் திடீர் சாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
x
தினத்தந்தி 10 Nov 2019 10:45 PM GMT (Updated: 10 Nov 2019 8:55 PM GMT)

திட்டக்குடி அருகே திருமண வீட்டுக்கு வந்த பெண் திடீரென உயிரிழந்தார். அவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.

திட்டக்குடி,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஒகளுர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலைவாணன். இவருக்கும் குன்னம் வட்டம் கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகள் ஆனந்தி(வயது 24) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கலைவாணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தி திட்டக்குடி அடுத்த வையங்குடி கிராமத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஆனந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித் தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் ஒகளூர் கிராமத்தில் உள்ள கலைவாணனின் வீட்டுக்கு எடுத்து சென்றனர்.

இதற்கிடையே ஆனந்தியின் தந்தை சின்னதுரை(60), ஆவினங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து போலீசார், ஒகளூர் சென்று அங்கிருந்த ஆனந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்திக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் விருத்தாசலம் சப்- கலெக்டர் (பொறுப்பு) மங்கலநாதன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story