கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்


கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 11 Nov 2019 11:00 PM GMT (Updated: 11 Nov 2019 10:17 PM GMT)

கொருக்குப்பேட்டையில் சாலையை சீரமைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர், கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், சாலையில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்துகளில் சிக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. எனவே குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்கள் சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி செயலாளர் லோகநாதன் தலைமையில் கொருக்குப்பேட்டை-மணலி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆர்.கே.நகர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையை சீரமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். 

Next Story