கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு


கீழ்கட்டளையில் வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 11 Nov 2019 10:19 PM GMT (Updated: 11 Nov 2019 10:19 PM GMT)

கீழ்கட்டளையில், வீடு புகுந்து 18 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள கீழ்கட்டளை அம்பாள் நகர் சுப்பிரமணிய தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (வயது 61). இவர், வண்டலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

நேற்று முன்தினம் மாலை முகமது ஆரிப், வீட்டை பூட்டிவிட்டு அதன் சாவியை செருப்புகள் வைக்கும் இடத்தில் மறைத்து வைத்துவிட்டு குடும்பத்துடன் ராயப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

18 பவுன் நகை திருட்டு

பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 18 பவுன் தங்க நகைகள் திருட்டுபோய் இருப்பது தெரிந்தது.

முகமது ஆரிப், வீட்டை பூட்டிவிட்டு சாவியை செருப்புகள் வைக்கும் இடத்தில் மறைத்து வைத்துவிட்டு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்து உள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த நகையை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story