பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தவறவிட்ட ரூ.1¾ லட்சத்தை எடுத்து கொடுத்த 2 கைதிகளுக்கு சிறைத்துறை சூப்பிரண்டு பாராட்டு


பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தவறவிட்ட ரூ.1¾ லட்சத்தை எடுத்து கொடுத்த 2 கைதிகளுக்கு சிறைத்துறை சூப்பிரண்டு பாராட்டு
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 6:24 PM GMT)

புதுக்கோட்டை சிறைத்துறை பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தவறவிட்ட ரூ.1¾ லட்சத்தை எடுத்து கொடுத்த 2 கைதிகளை சிறைத்துறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி பாராட்டினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட சிறை அருகே சிறைத்துறையின் சார்பில், பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தண்டனைக் கைதிகளின் நல்லொழுக்கம் பெற்ற 25-க்கும் மேற்பட்ட கைதிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்ப வந்த புதுக்கோட்டை அருகே உள்ள பரம்பூரை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் பெட்ரோல் நிரப்பிவிட்டு, அவருடைய கைப்பையை அங்கேயே தவறவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கைப்பையை கண்ட பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வரும் புஷ்பகுமார் மற்றும் கார்த்திக் ஆகிய இரு கைதிகள் எடுத்து அதை சோதனை செய்தனர். அதில், பணம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 கைதிகளும் அந்த பணத்தை பணியில் இருந்த சிறைத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது போலீசார் பணப்பையை சோதனை செய்ததில், அதில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் மற்றும் ஒரு துண்டு சீட்டு செல்போன் நம்பருடன் இருந்தது. இதைத்தொடர்ந்து ஜானகிராமனை பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வரவைத்த போலீசார், பணத்தை அவரிடம் வழங்கினார்கள்.

2 கைதிகளுக்கு பாராட்டு

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை சிறைத்துறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி பணத்தை எடுத்து கொடுத்த 2 கைதிகள் மற்றும் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை நேரடியாக பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு வந்து பாராட்டினார். பின்னர் இதுகுறித்து சிறைத்துறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி நிருபர்களிடம் கூறுகையில், வாடிக்கை யாளர் தவறவிட்ட பணத்தை எடுத்து கொடுத்த சிறை கைதிகளின் நன்னடத்தை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் 2 பேரும் விடுதலை ஆகும்போது தண்டனை குறைப்பு உள்ளிட்ட பயன்கள் அவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் என்றார்.


Next Story