திருமானூர் அருகே மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது


திருமானூர் அருகே மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது
x
தினத்தந்தி 12 Nov 2019 10:15 PM GMT (Updated: 12 Nov 2019 6:32 PM GMT)

திருமானூர் அருகே மகளிடம் தகராறு செய்ததால், தனது மாமனாரை அடித்துக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 67). இவருக்கு ஜாக்குலின் (42) என்ற மகளும், பாக்கியராஜ்(30) என்ற மகனும் உள்ளனர். ஜாக்குலினின் கணவர் டிசோசா(45).

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனது அக்காள் ஜாக்குலினின் மகள் கிரிஜாவை (25) பாக்கியராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரவித்(5) என்ற ஒரு மகன் உள்ளார். பாக்கியராஜ் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இதனால் கிரிஜா, தனது மகனுடன் தனது தாத்தாவும், மாமனாருமான செல்வராஜ் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் செல்வராஜ் அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து, தனது பேத்தியும், மருமகளுமான கிரிஜாவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த கிரிஜா இதுபற்றி தனது தந்தையும், செல்வராஜின் மருமகனுமான டிசோசாவிடம் கூறி அழுதுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இதுபற்றி, தனது மாமனார் செல்வராஜிடம் சென்று ‘தனது மகளிடம் ஏன் இப்படி தகராறு செய்கிறீர்கள்?’ என்று டிசோசா கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த டிசோசா அருகில் கிடந்த கட்டையை எடுத்து செல்வராஜை பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து வெங்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டிசோசாவை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story