தஞ்சை-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சேவைக்கான பணிகள் நிறைவு அடுத்த மாதம் சோதனை ஓட்டம்


தஞ்சை-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சேவைக்கான பணிகள் நிறைவு அடுத்த மாதம் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 6:52 PM GMT)

தஞ்சை-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சேவைக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் வழித்தடம் மிகவும் பழமை வாய்ந்தது ஆகும். முன்பு இந்த வழியாகத்தான் சென்னை போன்ற பகுதிகளுக்கும், தென்மாவட்டங்களுக்கும் அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டன. அப்போது தஞ்சை வழித்தடம் தான் மெயின் லைனாக இருந்தது. நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன. தஞ்சை வழியாக ரெயில்கள் இயக்குவது குறைக்கப்பட்டன.

மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றன. இந்த பகுதியில்தான் தஞ்சை பெரிய கோவில், கல்லணை, அரண்மனை, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில், நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற புண்ணிய தலங்களும் உள்ளன. இதனால் இந்த வழியாக கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மின்மயமாக்கும் பணிகள்

தற்போது தஞ்சை வழியாக 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், வேளாங்கண்ணி, திருச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், எர்ணாகுளம், திருநெல்வேலி, ராமேசுவரம், கோவை, சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, திருச்செந்தூர், வாரணாசி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இதையடுத்து திருச்சி-காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ.ஆகும். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் பிரிவு மேற்கொண்டுள்ளது.

தஞ்சை-திருச்சி

தஞ்சை-திருச்சி இடையே இருவழிப்பாதை என்பதால் இரண்டு வழித்தடத்திலும் மின் மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக தஞ்சை-திருச்சி இடையே இருவழிப்பாதையிலும், ஒருவழிப்பாதைக்கு தலா 1,200 உயர் அழுத்த மின் கம்பங்கள் என 2,400 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் முடிந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளன. இதுதவிர மின் ரெயில்சேவை வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பான சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டன.

துணை மின் நிலையம்

இதேபோல் திருவாரூர் வழித்தடத்தில் சாலியமங்கலத்தில் இருந்து காரைக்கால் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. ஒரு சில பகுதிகளில் இணைப்பு பணிகள் மட்டும் நடைபெற வேண்டி உள்ளது. இந்த பணிகளுக்காக தஞ்சை, நாகை, காரைக்கால், திருவாரூர் ஆகிய இடங்களில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தஞ்சையில் இருந்து காரைக்கால் இடையே மின் மயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தஞ்சை-திருவாரூர் இடையே முற்றிலும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து அடுத்த மாதம் அதிகாரிகள் ஆய்வு செய்து சோதனை ஓட்டம் நடத்த உள்ளனர்.

செலவு குறையும்

மின்மயமாக்கல் திட்டம் நிறைவேறினால் ரெயில்களின் வேகம் அதிகரித்து பயண நேரம் குறையும். இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற் படாது. ரெயில்களில் டீசல் பயன்பாடு பெருமளவு குறையும். இதனால் ரெயில்வே துறைக்கு செலவும் குறையும். மின்சார என்ஜின்களுக்கு அதிக இழுவை திறன் இருக்கும் என்பதால் ரெயில்களில் கூடுதலாக பெட்டிகளை சேர்க்கவும், கூடுதல் ரெயில்கள் இயக்கவும் வாய்ப்புகள் உண்டு என அதிகாரிகள் கூறினர்.


Next Story