25 அடி ஆழ தரைமட்ட கிணற்றில் தவறிவிழுந்தவர் சாவு புல் அறுக்க சென்றபோது பரிதாபம்


25 அடி ஆழ தரைமட்ட கிணற்றில் தவறிவிழுந்தவர் சாவு புல் அறுக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 7:41 PM GMT)

மணக்குடி அருகே புல் அறுக்க சென்றவர், 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டம் மணக்குடி அருகே மணவாளபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 49), தொழிலாளி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். தினமும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலையிலும் வழக்கம்போல் புல் அறுக்க அருகில் உள்ள கல்லடிவிளை பகுதிக்கு சென்றார். இரவு நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து அப்பகுதி முழுவதும் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கிணற்றுக்குள் செருப்பு...

நேற்று காலையில் மீண்டும் சுந்தரராஜனை தேடி உறவினர்கள் கல்லடிவிளை பகுதிக்கு சென்றனர். அங்கு பயன்பாடு இல்லாத மூடப்படாத தரைமட்ட கிணறு ஒன்று இருப்பதை கண்டனர். 25 அடி ஆழம் உள்ள கிணற்றை சுற்றி புல் வளர்ந்து இருந்தது. அந்த கிணற்றின் அருகில் சுந்தர்ராஜன் கொண்டு சென்ற வெற்றிலை பையும், புல் அறுக்க எடுத்து சென்ற அரிவாளும் கிடந்தது. இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் கிணற்றின் உள்ளே பார்த்தனர்.

அப்போது, தண்ணீரில் சுந்தர்ராஜனின் செருப்பு மிதப்பதை கண்டனர். அதனால், புல் அறுக்கும் போது கிணற்றுக்குள் சுந்தரராஜன் தவறி விழுந்து இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதுபற்றி சுசீந்திரம் போலீசாருக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகன், ஜனமேஜெயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் துரை தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சுந்தர்ராஜன் கிணற்றுக்குள் தண்ணீரில் மூழ்கி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கயிறு மூலம் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடும்பம்

சுந்தர்ராஜனுக்கு, பவானி என்ற மனைவியும், ஹரிகரசுதன், சபரிசுனில், சுதாகரன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

புல் அறுக்க சென்ற இடத்தில் தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story