எந்த நேரத்தில் வந்தாலும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது அமைச்சர் தங்கமணி பேட்டி


எந்த நேரத்தில் வந்தாலும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 12 Nov 2019 11:15 PM GMT (Updated: 12 Nov 2019 7:54 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் வட்டாரத்தில் ரூ.3.88 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டம் மூலம் பல ஏரிகளில் தற்போது பெய்துள்ள மழையால் நிரம்பி வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதால் 42 ஏரிகள் நிரம்பி உள்ளன. இலுப்பிலி ஏரி ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் செய்துள்ளதால், தற்போது பெய்துள்ள மழையால் அந்த ஏரி நிரம்பி உள்ளது. இது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிதும் பயன்படும்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ரூ.16.50 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள, தேர்கட்டுமான பணிகள் இன்னும் 3 மாதத்திற்குள் நிறைவடையும். ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு, மின்உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும்போது விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அதிக நஷ்டஈடுகளை வழங்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி உயர் மின்கோபுரம் அமையும் விவசாய நிலங்களில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு ரூ.37,600-ம், உயர் மின்கோபுரம் அமையும் விவசாய நிலத்திற்கு 100 சதவீதமும், உயர்கோபுர மின்பாதை செல்லும் விவசாய நிலங்களுக்கு 20 சதவீதமும் என்ற மதிப்பீட்டில் நஷ்டஈடு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் எதிர்காலத்தில் தடையில்லாத மின்சாரம் பெறுவதற்கு, புதிய மின்உற்பத்தியும் மின் வழித்தடங்கள் அமைப்பதும் முக்கிய தேவையாக உள்ளன. இதற்கு புதிய உயர்மின் கோபுரங்களும் மின்வழி பாதைகளும் அமைப்பது இன்றியமையாததாகும்.

தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் மின்சாரம் தொடர்பான விபத்துகள் ஏற்படாமல் தடுக்க புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் புதைவட மின்கம்பிகள் பதிக்கும் பணிகள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. வளர்ந்துவரும் நகரங்களுக்கு ஏற்ப அவற்றிற்கு, பாதுகாப்பான முறையில் மின்சாரம் வழங்கும் வகையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் மாநகராட்சிகளில் முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்றப்படும். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நகராட்சிகள் அளவில் தமிழகத்திலேயே முதன்முதலாக நடைபெற்று வரும் புதைவட மின்கம்பிகள் பதிக்கும் திட்டப்பணிகள் 50 சதவீதம் நடைபெற்றுள்ளன. இப்பணிகள் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையும்.

தமிழகத்தில் புதிய மின்உற்பத்தி திட்டங்கள் மூலம் 6,000 மெகாவாட் மின்உற்பத்தி பெறுவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில வழக்குகள் காரணமாக ஒருசில இடங்களில் இத்திட்டப்பணிகள் நிறைவேற்ற முடியாமல் உள்ளன. அவற்றையும் தடையின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகின்ற 2022-23-ம் ஆண்டுக்குள் 6,000 மெகாவாட் மின்உற்பத்தி தமிழகத்திற்கு முழுமையாக கிடைக்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் வடசென்னையில் 800 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் பணிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகளுக்காக நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் அவை அமைக்கப்பட உள்ளதால், டெண்டர் முடிந்தவுடன் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். வருகின்ற 15-ந் தேதி முதல் உள்ளாட்சி தேர்தலுக்காக அ.தி.மு.க.வில் விருப்பமனுக்கள் பெறப்பட உள்ளது. உள்ளாட்சி தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெகராஜ், சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, உதவி கலெக்டர் மணிராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சரவணன், கண்காணிப்பாளர் இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story