கிருஷ்ணகிரியில் டூரிஸ்ட், மேக்சிகேப் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு


கிருஷ்ணகிரியில் டூரிஸ்ட், மேக்சிகேப் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 8:02 PM GMT)

கிருஷ்கிரியில் டூரிஸ்ட், மேக்சிகேப் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் வழங்க கோரி ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை டூரிஸ்ட் மேக்சிகேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் முருகேசன், செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் ஹரிபாலாஜி, துணைத்தலைவர் ஜெயசீலன், துணை செயலாளர் டேவிட்ஆரோக்கியராஜ் மற்றும் செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய கலெக்டர், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை ஆகியோரது அனுமதியுடன் நாங்கள் எங்களது டூரிஸ்ட் மேக்சிகேப் வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகில் ஒரு தனியார் கட்டிடம் ஒன்றை கட்டி முடித்துள்ளனர். அவர்கள் கடந்த 3 மாதங்களாக எங்களை காலி செய்யுமாறு மிரட்டி வருகின்றனர்.

மிரட்டல்

இது சம்பந்தமாக கடந்த மாதம் 16-ந் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம். மாவட்ட கலெக்டரிடமும் இது குறித்து முறையிட்டோம். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் எங்களை காலி செய்யுமாறு ஆட்களை வைத்து மிரட்டி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

எனவே, தொழிலாளர் நலன் கருதி எங்கள் வாகனங்கள் நிறுத்தும் மேற்படி இடத்திற்கு பதிலாக மேம்பாலத்தின் அடியில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story