ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் கூலித்தொழிலாளி கைது


ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் கூலித்தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Nov 2019 10:45 PM GMT (Updated: 12 Nov 2019 8:16 PM GMT)

ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தும்பிபாடியை அடுத்துள்ள கொன்னப்பள்ளி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 9-ந் தேதி பகலில் அங்குள்ள கடைக்கு சென்றார். அதன்பிறகு அந்த சிறுமி வீட்டுக்கு திரும்பவில்லை.

அவரை கடந்த இரு நாட்களாக அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனிடையே நேற்று அந்த சிறுமி வீட்டுக்கு திரும்பி வந்தார். அவரிடம் பெற்றோர் விசாரித்தனர்.

அப்போது அந்த சிறுமி நடந்த விவரங்களை கண்ணீர் மல்க பெற்றோரிடம் கூறியுள்ளார். இதில், அவர் 9-ந் தேதி கடைக்கு சென்ற போது அதே ஊரை சேர்ந்த கூலித் தொழிலாளியான கோவிந்தராஜ் (வயது 27) என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி கரூருக்கு கடத்தி சென்று விட்டதாகவும், பின்னர் கரூரில் வைத்து தாலி கட்டியதுடன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் அந்த சிறுமியை நேற்று சொந்த ஊரில் விட்டுவிட்டு சென்று விட்டதாகவும், பெற்றோரிடம் கூறி அந்த சிறுமி கதறி அழுதுள்ளார்.

கூலித்தொழிலாளி கைது

இதையடுத்து 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூலித்தொழிலாளி கோவிந்தராஜ் மீது, அந்த சிறுமியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story