கிருஷ்ணா நதிநீர் குறைந்ததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


கிருஷ்ணா நதிநீர் குறைந்ததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:45 PM GMT (Updated: 12 Nov 2019 9:40 PM GMT)

கிருஷ்ணா நதிநீர் குறைந்ததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீீர் வந்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி சென்னை குடிநீர் வாரியத்துக்கும், 11-ந் தேதி புழல் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 1-ந் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நதி கால்வாயில் நெல் சாகுபடிக்காக தண்ணீர் எடுப்பதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

தண்ணீர் திறப்பு குறைப்பு

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 150 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் சராசரியாக வினாடிக்கு 800 கனஅடி வீதம் வந்தது குறிப்பிடதக்கதாகும். கிருஷ்ணா நதிநீர் வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நேற்று காலை வினாடிக்கு 713 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதில் புழல் ஏரிக்கு வினாடிக்கு 390 கனஅடி வீதமும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 323 கனஅடி வீதமும் அனுப்பப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 28.65 அடியாக பதிவானது. 1446 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. மழை நீர் வினாடிக்கு 160 கனஅடி வந்து கொண்டிருந்தது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 21 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

Next Story