வானவில் : மூன்று மாடல்களை களமிறக்குகிறது பி.எம்.டபிள்யூ.


வானவில் : மூன்று மாடல்களை களமிறக்குகிறது பி.எம்.டபிள்யூ.
x
தினத்தந்தி 13 Nov 2019 11:20 AM GMT (Updated: 13 Nov 2019 11:20 AM GMT)

பிரீமியம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மூன்று மாடல்களில் புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது.

அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவையாக இவை வடிவமைக்கப் பட்டுள்ளன. எஸ்.1000எக்ஸ்.ஆர்., எப்.900ஆர் மற்றும் எப்.900எக்ஸ்.ஆர். ஆகிய மாடல்கள் இதில் வந்துள்ளன.

எப்.900ஆர். மற்றும் எப்.900எக்ஸ்.ஆர். மாடல்கள் சாகசப் பயணத்துக்கு ஏற்றவை. இரட்டை சிலிண்டரைக் கொண்டவை. இவற்றில் ஒன்று 895 சி.சி. திறனும் மற்றொன்று 853 சி.சி. திறனும் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது. இதில் ஒன்று 105 ஹெச்.பி. திறனை 8,750 ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக் கூடியது. இதன் இழு திறன் 92 நியூட்டன் மீட்டராகும். உலோக பிரேமைக் கொண்டது. இதில் 13 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட டேங்க் உள்ளது. டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். புரோ, டைனமிக் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

எஸ்.1000எக்ஸ்.ஆர். மாடலில் புதிய ரக என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் உள்ளதைக் காட்டிலும் எடை குறைவான அதேசமயம் செயல்திறன் மிக்கதாக இது உருவாக்கப் பட்டுள்ளது. இதன் எடை முந்தைய மாடலைக் காட்டிலும் 10 கிலோ குறைந்து 226 கிலோவாக உள்ளது.

இது 165 ஹெச்.பி. திறனை 11,000 ஆர்.பி.எம். வேகத்திலும் 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 9,250 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.

டைனமிக் இ.எஸ்.ஏ., ரைடிங் மோட் புரோ, ஏ.பி.எஸ். புரோ, டி.டி.சி., ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் புரோ உள்ளது. நான்கு வித ஓட்டும் நிலைகள் உள்ளன. இதில் 6.5 அங்குல தொடுதிரை உள்ளது. சர்வதேச சந்தையைத் தொடர்ந்து இந்தியாவில் விரைவில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Next Story