கோவையில் பரிதாபம், புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை


கோவையில் பரிதாபம், புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Nov 2019 11:30 PM GMT (Updated: 13 Nov 2019 6:18 PM GMT)

கோவையில் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சூலூர்,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி மோகனா. இவர்களுடைய மகள் சத்யா (வயது 21), மகன் பிரவீன்குமார் (18). சந்திரன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மோகனா தனது 2 குழந்தைகளுடன் கோவை அருகில் உள்ள பீடம்பள்ளி பகுதியில் தங்கி விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே சத்யாவுக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் கடந்த சில தினங்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து புதுப்பெண் சத்யாவை காணவில்லை. இதனால் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் மோகனா அந்த பகுதி முழுவதும் தேடினார். இதில் சத்யா அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.

உடனே இதுகுறித்து சூலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி சுமார் 6 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம், பீடம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி, சூலூர் வருவாய் ஆய்வாளர் லாரன்ஸ் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சந்திரனுக்கு ஏற்கனவே அதிகளவில் கடன் இருந்து உள்ளது. அவர் இறந்தபின்னர் அந்த கடன்களை மோகனா வேலைசெய்து தனி ஆளாக சிறிது சிறிதாக கட்டி வந்தார். இந்த நிலையில் மகளின் திருமணத்திற்கு மோகனா வெளியில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடன் தொல்லையில் சிக்கி தவிக்கும் அம்மா, தனது திருமணத்திற்காக மேலும் கடன் வாங்கியதால் மனம் வருந்திய சத்யா, எதற்காக எனது திருமணத்திற்கு கடன் வாங்கினீர்கள் என்று அம்மாவிடம் கேள்வி கேட்டு உள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த சத்யா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில் புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story