கொள்ளேகாலில் ‘ஹனிடிராப்’ முறையில் அர்ச்சகரை மிரட்டி ரூ.20 லட்சம் பறிப்பு பெங்களூரு தம்பதி உள்பட 3 பேர் கைது


கொள்ளேகாலில் ‘ஹனிடிராப்’ முறையில் அர்ச்சகரை மிரட்டி ரூ.20 லட்சம் பறிப்பு பெங்களூரு தம்பதி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2019 10:00 PM GMT (Updated: 14 Nov 2019 5:52 PM GMT)

கொள்ளேகாலில் ‘ஹனிடிராப்’ முறையில் கோவில் அர்ச்சகரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்த பெங்களூரு தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளேகால், 

கொள்ளேகாலில் ‘ஹனிடிராப்’ முறையில் கோவில் அர்ச்சகரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்த பெங்களூரு தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில் அர்ச்சகர்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுன் காவேரி ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சீனிவாச ராகவன் என்பவர் அர்ச்சகராக உள்ளார். பிரபலமான இவர், குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதி கொடுப்பது மற்றும் தோஷங்களை நீக்கும் பரிகாரம் ஆகியவற்றை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு பெங்களூரு எசருகட்டாவை சேர்ந்த பசவராஜ் (வயது 42), அவருடைய மனைவி மகாலட்சுமி என்கிற சரோஜம்மா (35), பசவராஜின் தங்கை நாகரத்னம்மா (32) ஆகியோர் சென்றனர்.

பின்னர் அவர்கள் அடிக்கடி அந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இதனால் அவர்களுக்கும் அர்ச்சகர் சீனிவாச ராகவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனிவாச ராகவன் பெங்களூருவில் உள்ள பசவராஜின் வீட்டுக்கு சென்று சிறப்பு பூஜை செய்திருந்தார்.

ரூ.20 லட்சம் பறிப்பு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி, சீனிவாச ராகவனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எங்ளுக்கு ரூ.3 லட்சம் பணம் தேவைப்படுகிறது. அதனை நீங்கள் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் வீட்டுக்கு வந்தபோது நீங்கள் என்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், என்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி கூறி, உங்கள் புகழை கெடுப்பேன் என்று மிரட்டியுள்ளார். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தவறே செய்யாவிட்டாலும் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி தன்னை பற்றி கூறினால், தனது பெயர் கெட்டுவிடும் என்று பயந்த சீனிவாச ராகவன், அவர் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். இவ்வாறு அவர்கள் 3 பேரும் சீனிவாச ராகவனை மிரட்டி ரூ.20 லட்சம் வரை பறித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் மீண்டும் சீனிவாச ராகவனை தொடர்பு கொண்டு, தங்களுக்கு ரூ.50 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

3 பேர் கைது

பசவராஜ் மற்றும் அவருடைய மனைவியின் தொந்தரவு எல்லை மீறி சென்றதால் இதுகுறித்து சீனிவாச ராகவன், கொள்ளேகால் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அப்போது ‘ஹனிடிராப்’ முறையில் தன்னை மிரட்டி பசவராஜ், அவருடைய மனைவி மற்றும் தங்கை ஆகியோர் ரூ.20 லட்சம் வரை பறித்துள்ளதாக கூறினார். அதன்பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து போலீசாரின் அறிவுரையின்பேரில், சீனிவாச ராகவன் அவர்களை தொடர்பு கொண்டு, மத்தூருக்கு வந்தால் ரூ.50 லட்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய அவர்கள் 3 பேரும் மத்தூருக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த போலீசார் பசவராஜ், மகாலட்சுமி, நாகரத்னம்மா ஆகிய 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.17.77 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தம்பதி உள்பட 3 பேர் ‘ஹனிடிராப்’ முறையில் அர்ச்சகரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story