சுரண்டை அருகே பரிதாபம்: வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை


சுரண்டை அருகே பரிதாபம்: வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2019 10:45 PM GMT (Updated: 14 Nov 2019 7:12 PM GMT)

சுரண்டை அருகே வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

சுரண்டை, 

நெல்லை மாவட்டம் சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 80), விவசாயி. இவருடைய மனைவி சரஸ்வதி (72). இவர்களுக்கு கந்தசாமி என்ற ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர். கந்தசாமிக்கும் திருமணமாகி அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார்.

இதனால் கிருஷ்ணசாமியும், சரஸ்வதியும் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். 2 பேரும் வயது மூப்பின் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தனர். இதனால் அவர்கள் மனமுடைந்து காணப்பட்டு வந்தனர். அவர்களுக்கு கந்தசாமி தினமும் சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர்களுக்கு கந்தசாமி சாப்பாடு கொடுக்க வந்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் கிருஷ்ணசாமியும், சரஸ்வதியும் பிணங்களாக கிடந்தனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த கந்தசாமி இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணசாமியும், சரஸ்வதியும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்க முடியாததால் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story