திருவெறும்பூரில், 100 நாள் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


திருவெறும்பூரில், 100 நாள் வேலை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 15 Nov 2019 10:30 PM GMT (Updated: 15 Nov 2019 6:02 PM GMT)

100 நாள் வேலை கேட்டு திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துவாக்குடி,

திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.

திருவெறும்பூர் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டி அந்தோணியார் கோவில் தெரு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் வேலை வழங்க மறுக்கிறது. இதுவரை அப்பகுதி மக்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியப்பன், போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வருகிற 18-ந் தேதி(திங்கட்கிழமை) முதல் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தினால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story