உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் விருப்ப மனு


உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் விருப்ப மனு
x
தினத்தந்தி 15 Nov 2019 11:00 PM GMT (Updated: 15 Nov 2019 7:32 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராள மானவர்கள் விண்ணப்பம் செய்தனர்.

ராமநாதபுரம்,

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆணையின்படி அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் 2 நாட்கள் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.

அதன்படி மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா, மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் ராமநாதபுரத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்றனர்.

நகரசபை தலைவர் மற்றும் கவுன்சிலர், பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு மாவட்டத்தின் 11 ஒன்றியங்களை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை கழக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானவர்கள் விண்ணப்பித்தனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறியதாவது:- ஜெயலலிதாவின் வழியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தலைமையில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவ கல்லூரி விரைவில் ராமநாதபுரத்தில் அமைய உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் என்றைக்கும் தமிழக மக்கள் விரும்பக்கூடிய இயக்கம் அ.தி.மு.க. தான் என நிரூபித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு கூறினர். விருப்பமனு பெறும் நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story