கடலூரில், கடை பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கடலூரில், கடை பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Nov 2019 10:15 PM GMT (Updated: 15 Nov 2019 9:15 PM GMT)

கடலூரில் கடை பூட்டை உடைத்து செல்போன்கள், பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்,

கடலூர் புதுப்பாளையம் ராமசாமி தெருவை சேர்ந்தவர் அப்துல்சத்தார். இவருடைய மகன் அப்துல்கபூர் (வயது 43). இவர் கடலூர் கான்வென்ட் தெருவில் செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த அவர் வேலை முடிந்ததும் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது, கடை ‌‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அங்கே அவர் வைத்திருந்த ரூ.700 மற்றும் பழுதுபார்க்க வைத்திருந்த 5 செல்போன்களையும் காணவில்லை.

இதை யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச்சென்று விட்டனர். இது பற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் கடைக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் செல்போன்களை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story