வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்; தடையை மீறி சினிபால்சில் குளித்தனர்


வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்; தடையை மீறி சினிபால்சில் குளித்தனர்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:00 PM GMT (Updated: 17 Nov 2019 5:41 PM GMT)

வாரவிடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தடையை மீறி சினிபால்சில் குளித்தனர்.

பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். தமிழக, கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7,000 கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததாலும், பரிசல் இயக்க அனுமதி அளித்ததாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது.

இதனிடையே நேற்று வாரவிடுமுறையையொட்டி சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு, மெயின் அருவி, ஐந்தருவி வழியாக மணல் திட்டு வரை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதனிடையே காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, சினிபால்ஸ், நடைபாதை ஆகியவை சேதமடைந்தது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது. இருப்பினும் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தடையை மீறி சினிபால்சில் குளித்து மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆலாம்பாடி, மணல் திட்டு, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

Next Story