நின்ற லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் பலி


நின்ற லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 Nov 2019 10:45 PM GMT (Updated: 17 Nov 2019 6:04 PM GMT)

குமாரபாளையம் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

குமாரபாளையம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து சேலத்திற்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று வந்தது. இந்த வேனை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த டிரைவர் நந்தகுமார் (வயது 19) என்பவர் ஓட்டி வந்தார். பொங்கலூரை சேர்ந்த கோகுலகிரு‌‌ஷ்ணன் (18) என்பவர் கிளீனராக இருந்தார். அந்த வேனில் பொங்கலூரை சேர்ந்த குமார் (35) என்பவரும் உடன் வந்தார்.

அவர்கள் சேலத்தில் கோழிகளை இறக்கி விட்டு மீண்டும் வேனில் பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தில் வந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேன் டிரைவர் நந்தகுமார், கிளீனர் கோகுலகிரு‌‌ஷ்ணன் (18) ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், குமார் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த நந்தகுமார், கோகுலகிரு‌‌ஷ்ணன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதி டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் குமாரபாளையம் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story