போலீஸ் நிலையம் எதிரே, மனைவியை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற கணவர் - திருவாரூரில் பரபரப்பு


போலீஸ் நிலையம் எதிரே, மனைவியை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற கணவர் - திருவாரூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Nov 2019 10:15 PM GMT (Updated: 17 Nov 2019 7:10 PM GMT)

போலீஸ் நிலையம் எதிரே மனைவியை கத்தியால் குத்தி கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 42). இவர் தங்க நகை செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 12-ந்தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பத்மாவதி கோபித்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். இதுகுறித்து வீரமணி திருவாரூர் தாலுகா போலீசில் மனைவியை காணவில்லை என புகார் கொடுத்தார். இதுபற்றி தகவல் அறிந்த பத்மாவதி, வக்கீல் ராஜேந்திரனுடன் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது வக்கீல் ராஜேந்திரன், போலீஸ் நிலையத்திற்குள் சென்று வழக்கு குறித்து பேசி கொண்டிருந்தார்.

பத்மாவதி போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரமணி, பத்மாவதியிடம் பேசியபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பத்மாவதியை சரமாரியாக குத்தினார். பின்னர் அவர் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதில் காயம் அடைந்த 2 பேரும் வலிதாங்கமுடியாமல் அலறினர். இந்த சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் ஓடிவந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவாரூர் போலீஸ் நிலையம் எதிரில் நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story