ஜெயங்கொண்டம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர் - 12 பவுன் நகைகள் மீட்பு


ஜெயங்கொண்டம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் சிக்கினர் - 12 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 18 Nov 2019 10:30 PM GMT (Updated: 18 Nov 2019 6:28 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடை ஊழியர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்த 12 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 45). இவர் கடலூர் மாவட்டம், ஸ்ரீமு‌‌ஷ்ணம் டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம், 5 ஜோடி கொலுசுகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலான, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பெரம்பலூர் பகுதிகளில் நடைபெற்ற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கரூர் மாவட்டம், கணபதிபாளையம் கிராமத்தை சேர்ந்த விஜயராஜ் மகன் ரத்தின கிரீஸ்வரர் என்கிற கிரி(23) மற்றும் தஞ்சை மாவட்டம், கீழத்திருப்பந்துருத்தி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சம்பத்(34) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக காவலில் எடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலைச்சாமி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், ரத்தினகிரீஸ்வரரும், சம்பத்தும் வடவீக்கம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கடைக்கு செல்வதற்காக ராமச்சந்திரன் வீட்டின் வழியாக சென்றோம். அப்போது அவரது மனைவி வீட்டினை பூட்டிவிட்டு வெளியே செல்வதை பார்த்தோம். பின்னர் அவர் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றோம் என இருவரும் கூறியதாக போலீசார் கூறினர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் ரத்னகிரீஸ்வரர், சம்பத் ஆகிய இருவரையும் ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சக்திவேல், இருவரையும் திருச்சி மத்திய சிறையில் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் அவர்கள் இருவரையும் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

Next Story