சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:30 PM GMT (Updated: 18 Nov 2019 8:27 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே பழுதான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள நத்தம் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒன்றியச்சாலை ஒன்று சுமார் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், இச்சாலை போடப்பட்ட 2 மாதங்களில் குண்டும், குழியுமாக மாறி பழுதாகி பரிதாபமாக காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதே பகுதியில் தட்டான் ஏரிநீர் வரத்துக்காக சாலையின் குறுக்கே போடப்பட்ட கல்வெட்டும் சிதைந்து போனதில் பள்ளம் ஏற்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் பல முறை மனுக்கள் அளித்தனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நத்தம் கிராமத்தை சேர்ந்த 50 பெண்கள் உள்பட மொத்தம் 120 பேர் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டனர். ஆனால் அவர்களை போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலக வாசல் முன்பு நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம பொதுமக்கள் அனைவரும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story