உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்


உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்
x
தினத்தந்தி 19 Nov 2019 11:45 PM GMT (Updated: 19 Nov 2019 6:42 PM GMT)

அந்தியூர் அருகே உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியாரை ஏராளமான பக்தர்கள் பார்த்து ஆசி பெற்று செல்கிறார்கள்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 57). இவர் திருமணம் ஆகி கடந்த 25 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து துறவறம் மேற்கொண்டு தனியாக வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு யோகா மற்றும் ஆன்மிக விஷயங்கள் குறித்து கற்றுக்கொடுத்து வந்தார்.

மேலும் விஸ்வநாதனுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டது. இதனால் அவர் காசி, கேதர்நாத், பத்ரிநாத் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சிவாலயங்களுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவது வழக்கம். அப்போது அவர் சன்னியாசம் மேற்கொள்வதற்கான தீட்சையும் பெற்றார்.

இந்த நிலையில் கடந்த ஜூைல மாதம் 17-ந் தேதி அமர்நாத் புனித யாத்திரை சென்றார். அப்போது அங்குள்ள ஒரு பகுதியில் தூங்கி கொண்டிருந்தபோது கனவில் தோன்றிய மகான் ஒருவர் உலக நன்மைக்காக நல்லிக்கவுண்டன்புதூரில் 10 அடி ஆழ குழியில் பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து அமர்நாத் புனித யாத்திரை முடிந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு நல்லிக்கவுண்டன்புதூர் வந்தார். அப்போது அவர் தாடி வளர்த்து சாமியாராக காணப்பட்டார். மேலும் அவர் தன்னுடைய பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சாமி எனவும் மாற்றிக்கொண்டார். அவரை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பின்னர் தன்னுடைய சொந்த இடத்தில் 10 அடி ஆழ குழி தோண்டி அதில் பாதாள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மவுன விரதம் கடைபிடிக்கப்போவதாக அவர் அந்த கிராம மக்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவருடைய பேச்சை அந்த கிராமத்தை சேர்ந்த பலர் நம்ப மறுத்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் 50-க்கும் மேற்பட்டோர் கார்களில் நல்லிக்கவுண்டன்புதூர் வந்து உள்ளனர். இதையடுத்து அவர்கள் உதவியுடன் 10 அடி ஆழ குழி தோண்டி அதில் பாதாள சிவலி்ங்கத்தை விஸ்வநாதன் பிரதிஷ்டை செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி இரவு முதல் அவர் அந்த குழிக்குள் இறங்கி சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தார். பின்னர் தியானம் இருந்தபடி தனது மவுன விரதத்தை தொடங்கினார்.

பக்தர்களுக்கு ஆசி

உணவு சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வருகிறார். 3-வது நாளான நேற்றும் அவருடைய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மவுன விரதம் இருப்பதால் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் ஒரு வெள்ளைத்தாளில் பதில் எழுதி கொடுத்து வருகிறார். தொடர்ந்து 48 நாட்கள் குழிக்குள் விரதம் இருந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். இதையொட்டி குழியின் மேல்பகுதியில் தகரத்தினாலான மேற்கூரை கொண்ட கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் அந்த பகுதியில் பரவியது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நல்லிக்கவுண்டன்புதூர் சென்று அவரிடம் ஆசி பெற்று செல்கிறார்கள். அவரும் குழிக்குள் இருந்தவாறு குழிக்கு மேல் நிற்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

Next Story