தஞ்சையில், 2-வது நாளாக போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு 736 பேர் தகுதி


தஞ்சையில், 2-வது நாளாக போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு 736 பேர் தகுதி
x
தினத்தந்தி 19 Nov 2019 11:00 PM GMT (Updated: 19 Nov 2019 7:27 PM GMT)

தஞ்சையில் 2-வது நாளாக போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு நடந்தது. சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு 736 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் பணி புரிய 2-ம் நிலை போலீசாருக்கான எழுத்துத்தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தஞ்சை சரகத்திற்குட்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

2-வது நாளான நேற்று பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது. இதில் பங்கேற்க 348 பேருக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இவர்களில் 6 பேர் பல்வேறு காரணங்களால் வரவில்லை. 342 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டப்போட்டியும் நடத்தப்பட்டது. 100 மீட்டரை 17.5 வினாடிகளிலும், 200 மீட்டரை 38 வினாடிகளிலும் கடந்தவர்கள் அடுத்தகட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

இன்று சான்றிதழ் சரிபார்ப்பு

இதை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இது குறித்து டி.ஐ.ஜி. லோகநாதன் கூறும்போது, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆண்களில் 589 பேரும், பெண்களில் 147 பேரும் என மொத்தம் 736 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இன்று(புதன்கிழமை) சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கிறது. போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி இருப்பார்கள். அவைகளின் அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வேறொரு தேதியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்றார்.


Next Story