நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்


நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்
x
தினத்தந்தி 19 Nov 2019 10:15 PM GMT (Updated: 19 Nov 2019 7:42 PM GMT)

நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார்.

பெரம்பலூர்,

புதுச்சேரியில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. இந்து கோவில்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவருக்கு எதிராக பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் திரைப்பட நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் அதுகுறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அந்த கருத்து தொடர்பாக அதிருப்தியடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில துணை செயலாளர் முருகையன் தலைமையில் அந்த கட்சியின் வழக்கறிஞர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நி‌ஷா பார்த்திபனிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனையும், அவரது சமூகத்தை சார்ந்த எங்களை போன்றவர்களையும் கோவில்களுக்கு செல்வதை தடுக்க வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களுக்கு எதிரான கருத்தை பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Next Story