திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணி 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும்


திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணி 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 4:09 PM GMT)

திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டும் பணியானது 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என்று சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தெரிவித்தார்.

திருச்சி,

தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் செல்வராசு, ராஜேந்திரன், கருணாநிதி, காளிமுத்து, சரவணன், நடராஜன் உள்ளிட்ட 9 உறுப்பினர்கள் அடங்கிய குழு மற்றும் சட்டமன்ற குழு செயலாளர் சீனிவாசன் ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த பணிகளை ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுவும் சென்றிருந்தார்.

முதலில் திருச்சி காஜாமலை மற்றும் மணிகண்டம் வட்டாரத்தில் உள்ள உயிர் உர தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு செய்தனர். குஜிலிப்பட்டியில் சிறுபாசன குளம் குடிமராமத்து பணிகளையும், பாகனூரில் பெரியகுளம் மேம்பாட்டு பணியினையும், நவலூர் குட்டப்பட்டுவில் ரூ.4 லட்சம் மதிப்பில் நவீனமுறையில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்த நிழற்குடையினையும், அதவத்தூரில் பசுமை குடில் அமைக்கப்பட்டதையும் ஆய்வு செய்தனர். பாகனூரில் ஆய்வு மேற்கொண்டபோது, ஏரியை தூர்வாருவதுடன் கருவேல மரங்களை அகற்றிடவும் மதிப்பீட்டுக்குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம் உத்தரவிட்டார்.

குஜிலிப்பட்டியில் தூர்வாரும் பணியில் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் தங்களுக்கான 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்றும், கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் மதிப்பீட்டுக்குழுவினரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை அக்குழுவினர் அரசுக்கு பரிந்துரைப்பதாகதெரிவித்தனர்.

மதியம் 12.45 மணிக்கும் காவிரி-கொள்ளிடம் ஆறுகள் பிரியும் இடமான முக்கொம்பு மேலணைக்கு சென்றனர். அங்கு கடந்த ஆண்டு (2018) இடிந்து விழுந்த கொள்ளிடம் கதவணை கட்டும் பணி எந்த நிலையில் உள்ளது என்றும், பணிகளை துரிதமாக முடிக்கவும் குழுவினர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும் பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(ஆற்றுப்பாசனம்) பாஸ்கர், அக்குழுவினருக்கு விளக்கி கூறினார். அதன் பின்னர் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் தோப்பு வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்து பார்வையிட்டது. இந்த ஆய்வுகள் குறித்து, கலெக்டர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்தில் அதிகாரிகளுடன் சட்டமன்ற குழுவினர் விவாதித்தனர். அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட கால அளவுக்குள் நிறைவேற்றப்படுகிறதா? என்றும், பணியின் உறுதித்தன்மை சரியாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

முக்கொம்பு மேலணையில் உள்ள கொள்ளிடம் கதவணை 150 ஆண்டு கால பழமையானது. அதன் உறுதித்தன்மை இழந்து கடந்த ஆண்டு இடிந்து விட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.387 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணி தொடங்கப்பட்டு 8 மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு, வருகிற 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் புதிய கதவணை கட்டுமான பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கதவணை மிகவும் நேர்த்தியாக, 60 முதல் 70 அடிவரை பாறை இருக்கும் இடம்வரை ஆழமாக தோண்டப்பட்டு, அதன் பின்னர் பாறையிலும் டிரில் மி‌ஷின் வைத்து 2 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு பில்லர்கள் எழுப்பப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 5 லட்சம் கன அடிக்கு தண்ணீர் வந்தால்கூட தாங்கும் திறன் கொண்டதாக புதிய கதவணை அமையும். காவிரியில் வரும் நீர், ஒரு சொட்டுக்கூட கடலில் கலந்து வீணாகி விடக்கூடாது என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வி‌‌ஷன்-2021 என்ற தொலைநோக்கு திட்டத்தின் வழிகாட்டுதலின் பேரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதுபோல குடிமராமத்து பணிகளும் மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் மழைநீரை ஏரி, குளங்களில் சேமிக்க முடியும். மன்னர்கள் ஆட்சி காலத்தில் உள்ளதுபோல, குளங்கள் இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை இந்த அரசால் உருவாக்கப்படும். டெங்கு கொசுக்களை ஒழிக்கும் வகையில், தேங்கிய தண்ணீரை மண்ணில் இறக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மேலும் விவசாயிகளுக்கு மானியம் மூலம் சொட்டுநீர் பாசனம் செயல்படுத்தப்படுகிறது. 1 ஏக்கர் பாசனத்தை சொட்டு நீர் பாசன முறையில் 3 ஏக்கர் வரை பாசனம் செய்ய முடியும். மேலும் மக்களிடம் குறைகளையும் கேட்டு அறிந்தோம். சில இடங்களில் கூலி குறைவு என்று கருத்து சொல்லி இருக்கிறார்கள்.

அரசின் திட்டங்களை குறித்த காலத்திற்குள் முடிக்கப்படுகிறதா? என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, அவற்றை அறிக்கையாக தயார் செய்து சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் மாலையில், திருச்சி கலையரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவினர் ஆய்வு நடத்தினர்.

Next Story