திருச்சியில் அடுத்தடுத்த கடைகளில் கைவரிசை: மடிக்கணினிகள், செல்போன்கள் திருட்டு


திருச்சியில் அடுத்தடுத்த கடைகளில் கைவரிசை: மடிக்கணினிகள், செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 4:35 PM GMT)

திருச்சியில் அடுத்தடுத்த கடைகளில் மடிக்கணினிகள், செல்போன்களை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கே.கே.நகர்,

திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் கடைகள் வரிசையாக உள்ளன. இதில் செல்போன் பழுதுபார்க்கும் கடை, இன்டர்நெட் சென்டர், மீன் கடைகள், பால் விற்பனை கடை என அடுத்தடுத்து உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். செல்போன் பழுது பார்க்கும் கடை உள்பட வரிசையாக 5 கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தந்த கடை உரிமையாளர்கள் விரைந்து வந்தனர். மேலும் கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் செல்போன் பழுது பார்க்கும் கடையில் 2 மடிக்கணினிகள் மற்றும் ரூ.8,500 திருட்டு போய் இருந்தது. மேலும் இன்டர்நெட் சென்டரில் ஒரு மடிக்கணினி மற்றும் மீன் கடையில் 2 செல்போன்கள் திருடு போனது தெரியவந்தது. மற்ற கடைகளில் பூட்டுகள் மட்டும் உடைக்கப்பட்டு இருந்தன. ஏதேனும் பொருட்கள் திருட்டு போகவில்லை. நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி திருடிச்சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

கண்காணிப்பு கேமராக்கள்

காஜாமலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story