திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி


திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை: பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி
x
தினத்தந்தி 20 Nov 2019 11:15 PM GMT (Updated: 20 Nov 2019 5:52 PM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே திருமணமான 4 மாதங்களில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் புதைக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவருடைய மகன் நவீன்குமார்(வயது 30). இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த புவனேஸ்வரி(27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக நவீன்குமார்-புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த புவனேஸ்வரி கடந்த 18-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த புவனேஸ்வரி பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

திருமணமான 4 மாதங்களில் புவனேஸ்வரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் நேற்று நவீன்குமாரின் வீட்டு வாசலில் புவனேஸ்வரியின் உடலை புதைக்க முடிவு செய்தனர். அதன்படி வீடு முன்பு திரண்ட உறவினர்கள் அங்கு பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.

அப்போது வீட்டில் இருந்த பொருட்களை புவனேஸ்வரியின் உறவினர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று புவனேஸ்வரியின் உறவினர்களை சமாதானம் செய்தனர். இதன் காரணமாக வீட்டு முன்பு உடலை புதைக்கும் முடிவை உறவினர்கள் கைவிட்டனர்.

தீக்குளித்து இறந்த பெண்ணின் உடலை கணவரின் வீட்டு வாசலில் உறவினர்கள் புதைக்க முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புவனேஸ்வரி தற்கொலை தொடர்பாக பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவருக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் பட்டுக்கோட்டை உதவி கலெக்டரும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Next Story