சோழவரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
சோழவரம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி,
பொன்னேரி அருகே எருமைவெட்டிபாளையம் கிராமம் உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சோழவரம் பஜாருக்கு 8 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று வரவேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
சாலையில் நோயாளிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் வியாபாரிகள் உரிய நேரத்திற்கு சென்று வர முடியவில்லை. மேலும் அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் கால தாமதமாக வந்து செல்கிறது.
சாலை மறியல்
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை கண்டித்து பொதுமக்கள் சோழவரம் ஒன்றிய அலுவலகம் முன் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story