மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சாவு வேன் மோதியதால் பரிதாபம்


மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேர் சாவு வேன் மோதியதால் பரிதாபம்
x
தினத்தந்தி 20 Nov 2019 10:30 PM GMT (Updated: 20 Nov 2019 6:01 PM GMT)

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக பெட்ரோல் நிலையத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டனர். பின்னர் சென்னை நோக்கி செல்ல அங்குள்ள சாலையை கடக்க முயன்றனர். அப்போது புதுச்சேரி நோக்கி சென்ற வேன் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டது.

3 பேர் சாவு

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலையில் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மற்றொரு வாலிபரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

விபத்தில் இறந்தவர்கள் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த வெள்ளை (வயது 19), டில்லி (18) மற்றும் அண்ணாநகரை சேர்ந்த மோகனா (17) என்பது தெரியவந்தது. காயம் அடைந்தவர் பெரும்பாக்கத்தை சேர்ந்த ஆகாஷ் (18) என்பதும் தெரியவந்தது. நண்பர்களான அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரத்திற்கு வந்து செல்லும்போது இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

கைது

விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் பாபுவை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சேதம் அடைந்தது. விபத்து காரணமாக மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story