58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்காதது ஏன்? மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்


58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்காதது ஏன்? மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:15 PM GMT (Updated: 20 Nov 2019 8:06 PM GMT)

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாதது ஏன்? என்பதற்கு மதுரையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் கூறினார்.

மதுரை,

அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் புதிது புதிதாக உதயம் ஆகலாம். யார் கட்சி தொடங்கினாலும், யார், யாரோடு இணைந்தாலும் அ.தி.மு.க.விற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று வந்துள்ளேன். முதலீட்டாளர்களை சந்தித்து பேசியதன் பேரில் அவர்களும் இங்கே வருவதாக கூறியிருக்கிறார்கள். உலக வங்கியிடம் சென்று பேசியுள்ளோம். அவர்களும் இந்தியா வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக வீடு இல்லாத ஏழைகளுக்கு முதல்கட்டமாக 5 ஆயிரம் வீடுகள் கட்டித்தரும் திட்டம் உள்ளது.

தி.மு.க.

58 கிராம கால்வாய் திட்டத்தில், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒரு தவறான அரசாணை பிறப்பித்துள்ளனர். வைகையில் 67 அடிக்கு மேல் தண்ணீர் இருக்க வேண்டும் எனவும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைகோடிக்கு வைகை தண்ணீர் சென்ற பிறகுதான் பிற ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் அரசாணை உள்ளது. அதனை சரி செய்ய பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தற்போது போராட்டம் நடந்து வரும் நிலையில் இதுதொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்.

மேலவளவு குற்றவாளிகளை விடுவித்த விஷயத்திற்கு நீதிமன்றம் தங்களுடைய கருத்துகளை கூறியிருக்கிறது. அதுபோல், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.

தேர்தல் கூட்டணியில் யார் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம். அரசியலில் எதுவும் நடக்கலாம். அ.தி.மு.க. ஒரு வலுவான இயக்கம் என்பது விருப்ப மனுக்கள் அளிப்பதிலேயே தெரிகிறது. ஏராளமானவர்கள் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர். இதில் தகுதி உள்ளவர்களுக்கு சீட் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story