நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி


நண்பரின் இறுதி சடங்குக்கு சென்றபோது சம்பவம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து டாக்டர் பலி
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 10:07 PM GMT)

நண்பரின் இறுதி சடங்கில் பங்கேற்ற டாக்டர், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுச்சேரி,

கொசப்பாளையம் திருமால் நகரை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மகன் கில்பர்ட் ரீகன் (வயது 31). டாக்டர். இவர் அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வந்தார்.

இந்த நிலையில் முத்தரையர்பாளையம் பகுதியில் அவருடைய நண்பர் ஒருவர் இறந்துபோனார். அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் சென்றார். இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு மீண்டும் அவர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார்.

வழுதாவூர் சாலையில் வந்தபோது அந்த பகுதியில் இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியபோது, கில்பர்ட் ரீகன் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கில்பர்ட் ரீகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்குப்பிரிவு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story