ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த அலட்சியம்: பிரசவித்த பெண்ணுக்கு ஊசியை உடலுக்குள் வைத்து தைத்ததால் பரபரப்பு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த அலட்சியம்: பிரசவித்த பெண்ணுக்கு ஊசியை உடலுக்குள் வைத்து தைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Nov 2019 11:15 PM GMT (Updated: 21 Nov 2019 6:59 PM GMT)

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண்ணின் உடலில் ஊசியை வைத்து தையல் போட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது., அந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள மரவெட்டிவலசை சேதுபதி நகரை சேர்ந்தவர், கார்த்திக். அவருடைய மனைவி ரம்யா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டு் ஆகிறது. இந்தநிலையில் கர்ப்பம் அடைந்த ரம்யா, பிரசவத்துக்காக கடந்த 17-ந் தேதி உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரம்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு தையல் போடப்பட்டது.

அதன் பின்னர் வீடு திரும்பிய ரம்யாவுக்கு 3 நாட்களுக்கு பிறகு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உறவினர்கள், ரம்யாவை மீண்டும் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று காண்பித்துள்ளனர். அங்கிருந்த டாக்டர்கள், அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

உடலுக்குள் ஊசி

அதனை தொடர்ந்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது, ரம்யாவுக்கு தையல் போட்ட இடத்தில், முறிந்த நிலையில் உள்ளே ஊசி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ரம்யாவின் உறவினர்கள், கிராம மக்கள் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசவத்தின்போது ஊசியை பெண்ணின் உடலுக்குள் வைத்து தையல் போட்டவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் உச்சிப்புளி போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கைகளை மருத்துவ துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பாக காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்..

மதுரையில் அறுவை சிகிச்சை

இதற்கிடையே, மதுரைக்கு கொண்டு வரப்பட்ட ரம்யா, மதுரை பெரிய ஆஸ்பத்திரியின் மகப்பேறு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது, அவரது உடலில் ரத்த அளவு குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு 4 யூனிட் ரத்தம் உடனடியாக ஏற்றப்பட்டது. அதன்பின்னர் நேற்று காலை 10.30 மணி அளவில் ரம்யாவிற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

சுமார் 1 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடலில் இருந்த 2 சென்டி மீட்டர் நீளமுள்ள ஊசி அப்புறப்படுத்தப்பட்டது. டாக்டர்கள் சுமதி, சுதா உள்பட 4 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சையை மேற்ெகாண்டனர். தற்போது ரம்யா நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

செவிலியர் பணி இடைநீக்கம்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் பத்மா, மாவட்ட சுகாதார துணை இயக்குனர் குமரகுருபரன், நேர்முக உதவியாளர் நம்புராஜன் ஆகியோர் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த வட்டார மருத்துவ அதிகாரி சுரேந்திரன், டாக்டர் முகமது தாசிர் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் செவிலியர் அன்பு என்பவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டனர். இதுபோல், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் மருத்துவ துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விசாரணை அறிக்கையை சென்னை மருத்துவ துறைக்கு அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story