அங்கன்வாடி மையங்களுக்கு கெட்டுப்போன முட்டைகள் வினியோகம் மாணவர்கள்-பெற்றோர் அதிர்ச்சி


அங்கன்வாடி மையங்களுக்கு கெட்டுப்போன முட்டைகள் வினியோகம் மாணவர்கள்-பெற்றோர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 21 Nov 2019 10:45 PM GMT (Updated: 21 Nov 2019 7:05 PM GMT)

அங்கன்வாடி மையங்களுக்கு கெட்டுப்போன முட்டைகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிக்கவுண்டம்பாளைத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள அங்கேரிபாளையம் அங்கன்வாடி மையத்தில் கட்டிட சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் அந்த மையத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளும் அவினாசிக்கவுண்டம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் தற்காலிகமாக அங்கு தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களில் வாரத்தில் திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்குவது வழக்கம். அதன்படி நேற்று வழக்கம் போல் அங்கன்வாடி மைய சத்துணவு ஊழியர் மாணவர்களுக்கான முட்டைகளை அடுப்பில் வேக வைப்பதற்கு முன்பு தண்ணீரில் போட்டு கழுவினார். ஆனால் முட்டைகள் அனைத்தும் மிதந்தன. இதையடுத்து அந்த முட்டைகளை எடுத்து பார்த்த போது அவை அனைத்தும் கெட்டுப்போனது தெரிய வந்தது. மேலும் அந்த மையத்திற்கு கடைசியாக கொண்டு வரப்பட்ட 600 முட்டைகளும் கெட்டுப்போயிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதே போல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த முட்டைகள் கெட்டுப்போயிருந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கன்வாடி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த முட்டைகள் அனைத்தும் அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. முட்டைகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டதால் நேற்று மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் வழங்கப்படவில்லை.

சரியான நேரத்தில் சத்துணவு ஊழியர் கெட்டுப்போன முட்டைகளை பார்த்து கண்டுபிடித்ததால் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள்.

Next Story