சேலத்தில் பரிதாபம் கல்லூரி பஸ் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி


சேலத்தில் பரிதாபம் கல்லூரி பஸ் மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி
x
தினத்தந்தி 21 Nov 2019 10:30 PM GMT (Updated: 21 Nov 2019 8:39 PM GMT)

சேலத்தில் வேலைக்கு சென்ற போது கல்லூரி பஸ் மோதி தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்தார்.

சேலம்,

சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள கே.என்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டினார்..

பொன்னம்மாபேட்டை பகுதியில் ஒரு கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ், மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் அவர் கீழே விழுந்தார்.

பலி

அப்போது தலையில் அணிந்து இருந்த ஹெல்மெட் உடைந்து நொறுங்கியது. மேலும் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story