அழிந்து வரும் புலிகுளம் மாட்டினத்தை பாதுகாக்க வேண்டும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு


அழிந்து வரும் புலிகுளம் மாட்டினத்தை பாதுகாக்க வேண்டும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 21 Nov 2019 11:00 PM GMT (Updated: 21 Nov 2019 8:57 PM GMT)

அழிந்து வரும் மாட்டினமான புலிகுளம் வகையை பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

மானாமதுரை,

மானாமதுரை அருகே தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள புலிகுளம் மாட்டின ஆராய்ச்சி மையத்தை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். முன்னதாக கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையிலும், தமிழ்நாடு கால்நடை மருந்து அறிவியல் துணை வேந்தர் பாலசந்திரன் முன்னிலையிலும் அமைச்சர் பாஸ்கரன், எம்.எல்.ஏ. நாகராஜன், மாவட்ட செயலாளர் செந்தில் நாதன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், பாரதிராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா, நிர்வாகிகள் மாரிமுத்து, சின்னைமாரியப்பன், விளத்தூர் நடராஜன், நமச்சிவாயம், நாகு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

புலிகுளம் மாடு என்பது தமிழகத்தில் இருக்கின்ற உள்ளூர் நாட்டினங்களில் பிரசித்தி பெற்றவை, அதே போல் காங்கேயம் காளை நாட்டினமும் சிறப்பு வாய்ந்தது இவைகளை பாதுகாக்க வேண்டும். இந்த ஆராய்ச்சி மையம் மூலமாக புலிகுளம் காளைகள், பசுக்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கொடுப்தே இதன் நோக்கமாகும். புலிகுளம் காளைகள் தான் மற்ற காளைகளை விட சிறந்து இருப்பதாக ஆராச்சியாளர்கள் கூறி உள்ளனர். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அழிந்துவரும் மாட்டினங்களை காப்பதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு

இந்த மையத்துக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டபட்டு 40 பசுக்களும் 5 காளை மாடுகளும் இங்கு உள்ளன. புலிகுளம் மாடுகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளன இவைகளை அதிகளவில் உற்பத்தி செய்து அவற்றை விவசாயிகளிடம் கொடுத்து அதனுடைய எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். புலிகுளம் காளைகள் ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் பெயர்போன காளைகளாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வகையில் தரமானதாக உற்பத்தி செய்ய வேண்டும். நமது அடையாளத்தை மீட்டு எடுக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம். அந்த வகையில் குறைந்து வரும் புலிகுளம் மாட்டினை அதிகரிக்க இந்த ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி செய்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தற்போது 134 தொகுதியில் வென்று உள்ளோம். உள்ளாட்சி தேர்தல் என்றாலும் மற்ற தேர்தல் என்றாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் இன்னும் 100ஆண்டுகள் அ.தி.மு.க. இருக்கும் என தெரிவித்தார்.


Next Story