கார்-வேன் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி சாவு நாகமங்களா அருகே பரிதாபம்


கார்-வேன் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி சாவு நாகமங்களா அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 21 Nov 2019 10:10 PM GMT (Updated: 21 Nov 2019 10:10 PM GMT)

நாகமங்களா அருகே கார்-வேன் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மண்டியா,

மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா அஞ்சே சித்தனஹள்ளி கிராமத்தின் அருகே ஜீவர்கி-சாம்ராஜ்நகர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு காரும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேன் மற்றும் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. மேலும் இந்த விபத்தில் கார் மற்றும் வேனில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதில், கார் மற்றும் வேனின் இடிபாடுகளிடையே சிக்கி 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து இருந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் பலத்த காயமடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பலியான 6 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் பெயர் விவரங்கள் உடனடியாக போலீசாருக்கு கிடைக்கவில்லை. கார் டிரைவர் வேகமாகவும், கவனக்குறைவாகவும் வந்ததே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இதையடுத்து போலீசார், விபத்துக்குள்ளான வேன் மற்றும் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து பெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story