பெங்களூருவில் பயங்கரம்: ஏரியில் மூழ்கடித்து சிறுவன் சித்ரவதை 6 பேர் சிக்கினர் - வீடியோ வெளியாகி பரபரப்பு


பெங்களூருவில் பயங்கரம்: ஏரியில் மூழ்கடித்து சிறுவன் சித்ரவதை 6 பேர் சிக்கினர் - வீடியோ வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 21 Nov 2019 10:22 PM GMT (Updated: 21 Nov 2019 10:22 PM GMT)

பெங்களூருவில் ஏரியில் மூழ்கடித்து சிறுவனை சித்ரவதை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 6 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். சிறுவனை ஏரியில் மூழ்கடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு சம்பங்கிராம்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கன்டீரவா விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த நிலையில், மைதானம் அருகே உள்ள ஏரிக்கு ஒரு சிறுவனை வாலிபர்கள் சிலர் அழைத்து வந்தனர்.

பின்னர் அந்த சிறுவனை வாலிபர்கள் ஏரிக்குள் பிடித்து தள்ளுவதுடன், அவனுடன் சேர்ந்து ஏரிக்குள் குதிப்பது, ஏரி தண்ணீருக்குள் மூழ்கடித்து சிறுவனை வாலிபர்கள் சித்ரவதை செய்வது, சிறுவனை தாக்குவது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று கன்னட தொலைகாட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியானது.

மேலும் அந்த வீடியோவில் சிறுவன் தனக்கு நீச்சல் தெரியாது என்று கூறுவதுடன், தன்னை விட்டுவிடும்படி வாலிபர்களிடம் கேட்டும், அவர்கள் விடாமல் சிறுவனை தண்ணீரில் மூழ்கடிக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுவன் உயிர் தப்பி இருந்தான். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர், சம்பங்கிராம்நகர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கடந்த 17-ந் தேதி சிறுவனை, ஏரி தண்ணீரில் மூழ்கடித்து வாலிபர்கள் கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட போலீசார், சிறுவனை ஏரியில் மூழ்கடித்து சித்ரவதை செய்ததாக கூறி 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் 6 பேரும் 18 வயதை நிரம்பாதவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

ஏரியில் மூழ்கடித்து சிறுவனை கொல்ல முயன்ற சம்பவம் மற்றும் அதுதொடர்பான வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story