சேலத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி கைக்குழந்தையுடன் மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு


சேலத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி கைக்குழந்தையுடன் மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Nov 2019 10:30 PM GMT (Updated: 22 Nov 2019 5:32 PM GMT)

விபத்தை ஏற்படுத்திய பெண் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் தீக்குளிக்க முயன்றார். பின்னர் கைக்குழந்தையுடன் மறியலிலும் ஈடுபட்டதால் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் சித்தனூர் மல்லமூப்பம்பட்டியை அடுத்த அய்யம்பெருமாம்பட்டி அருகே உள்ள கக்கன்காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி தேன்மொழி. கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் தேன்மொழி, தனது கணவர் மணிகண்டன் மற்றும் கைக்குழந்தை, உறவினர்களுடன் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் திடீரென்று பாட்டிலில் மறைத்து வைத்துக்கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றினார். இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தேன்மொழியை பிடிக்க ஓடினர்.

அப்போது தேன்மொழி போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஓட, ஓட தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். போலீசார் விரைந்து சென்று தேன்மொழியிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவரை மீட்டனர்.

தொடர்ந்து தேன்மொழி தனது கைக்குழந்தை மற்றும் கணவர், உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரத்திற்கு பிறகு போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேனில் ஏற்றி சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இது குறித்து தேன்மொழி கூறியதாவது:-

கடந்த 5-ந்தேதி எனது கணவர் மணிகண்டன் அரியானூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பெண் டாக்டர் ஒருவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்து கணவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளார். இதில் எனது கணவர் படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்திய பெண் டாக்டர் மீது உரிய விசாரணை நடத்தக்கோரி போலீசில் புகார் கொடுத்தேன். சரியான விசாரணை இல்லை.

பின்னர் போலீஸ் துணை கமி‌‌ஷனரிடம் மனு கொடுத்தேன். அதற்கு அவர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகு மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். ஆனால் போலீசார் விபத்து ஏற்படுத்திய பெண் டாக்டரை அழைத்து விசாரணை நடத்தவில்லை. எங்களிடம் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விட்டோம். எனவே கோர்ட்டுக்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி போலீசார் எங்களை அனுப்பி வைத்து விட்டனர்.

எனவே கணவர் மணிகண்டனுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவும், மேலும் விபத்தை ஏற்படுத்திய பெண் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Next Story