எத்தனை பேர் இணைந்து வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது - அமைச்சர் காமராஜ் பேட்டி


எத்தனை பேர் இணைந்து வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது - அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 22 Nov 2019 10:00 PM GMT (Updated: 22 Nov 2019 7:02 PM GMT)

எத்தனை பேர் இணைந்து வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மன்னார்குடி, 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 59 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை தந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அந்த வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசை தேடி மக்கள் என்ற நிலையை மாற்றி மக்களை தேடி அரசு என்ற நிலையை நோக்கி சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள், நகரங்கள் அனைத்து பகுதி களிலும் 342 சிறப்பு குறைத்தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் 13 ஆயிரத்து 178 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலினையின் அடிப்படையில் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.112 கோடியே 51 லட்சம் கடன் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், முன்னாள் நகரசபை தலைவர் சிவராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பொன்.வாசுகிராமன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்செல்வன், மன்னார்குடி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கலியபெருமாள், வடுவூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் அரிகிரு‌‌ஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தி.மு.க.வுடன் இணைந்து சதி செய்தவர் டி.டி.வி.தினகரன். உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை. ரஜினி, கமல் இணைவது நாட்டு மக்களுக்கு பயன்தராது. எத்தனை பேர் இணைந்து வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story