அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை: மாநில தரவரிசை பட்டியலில் தஞ்சைக்கு மூன்றாமிடம்


அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை: மாநில தரவரிசை பட்டியலில் தஞ்சைக்கு மூன்றாமிடம்
x
தினத்தந்தி 23 Nov 2019 11:00 PM GMT (Updated: 23 Nov 2019 7:14 PM GMT)

அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால் மாநில தரவரிசை பட்டியலில் தஞ்சைக்கு மூன்றாமிடம் கிடைத்துள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகம் பாரம்பரிய சின்னங்கள் நிறைந்த இடமாகும். திராவிட கட்டிட கலை பாணியை பிரதிபலிக்கும் கோவில்கள் நிறைந்தது. கோவில்களில் வியக்க வைக்கும் கோபுரங்கள், ரதங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. இந்தியாவின் சுற்றுலா வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாக விளங்குகிறது.

தொன்மையான வரலாற்று நினைவு சின்னங்கள், பழமையான கோவில்கள், பண்பாட்டை விளக்கும் திருவிழாக்கள், குகை ஓவியங்கள், கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைப்பகுதிகள், அருவிகள் என அந்தந்த பகுதிகளின் தன்மைக்கு ஏற்ப மாநிலம் முழுவதும் சுற்றுலா தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றை கண்டுகளிக்க உள்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அதிக அளவில் தமிழகத்திற்கு வந்து செல்கின்றனர்.

வரலாற்று பெருமை

தஞ்சை மாவட்டம் தொல்லியல் சிறப்பும், பாரம்பரிய பண்பாடும், வரலாற்று பெருமையும் உடையது. சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்குவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கலைகளான நாட்டியம், இசை, நாடகம், வீணைகள், கலைத்தட்டுகள் செய்வது என பல கலைகளை வளர்த்த நகரமாகும்.

மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட யுனெஸ்கோ அங்கீகரித்துள்ள தஞ்சை பெரியகோவில் கட்டிட கலையில் சிறந்து விளங்குகிறது. இந்த கோவிலின் கட்டிடக்கலை, சிற்பக்கலையின் அதிசயத்தை கண்டு உணரவும் பலரும் இங்கு வருகின்றனர். இவர்கள் பெரிய நந்தி, உயரமான மூலவர் கோபுரம், சோழர், நாயக்கர், மராட்டிய மன்னர்கள் காலத்து சிற்பங்களை பார்த்து பிரமிப்பு அடைகின்றனர்.

எப்படி சாத்தியம்?

மலைகள் இல்லாத தஞ்சையில் கற்களாலேயே இவ்வளவு பெரிய கோவிலை கட்டியது எப்படி சாத்தியம்? என இன்றைக்கும் சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பெரிய கோவில் மட்டுமின்றி அரண்மனை, அரிய நூல்கள் நிறைந்த சரசுவதி மகால் நூலகம், அருங்காட்சியகம், கலைக்கூடம் போன்றவைகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன.கரிகால்சோழன் கட்டிய கல்லணை, கோவில்கள் நிறைந்த நகரமான கும்பகோணத்திற்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் காணும் மாநிலங்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் தேசிய அளவிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். கடந்த 3 ஆண்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

மாநில தரவரிசை பட்டியல்

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை ஊக்குவிப்பதற்காக மாநில அளவில் தரவரிசை பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டில் தமிழகத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்த மாவட்டங்களின் தரவரிசை பட்டியலை மாநில அரசின் சுற்றுலாத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

இதன்படி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னை 2-ம் இடமும், ராமநாதபுரம் 3-ம் இடமும், திண்டுக்கல் 4-ம் இடமும் பெற்றுள்ளது. தஞ்சை 5-ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 2 கோடியே 49 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தஞ்சை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

3-ம் இடம் பிடித்த தஞ்சை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் சென்னை முதலிடமும், காஞ்சிபுரம் 2-ம் இடமும் பிடித்துள்ளது. தஞ்சை 3-ம் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா, ர‌‌ஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 35 லட்சத்து 61 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தஞ்சைக்கு வருகை தந்துள்ளனர்.

தஞ்சை நகரில் பீரங்கி மேடு, ஆயிரம் ஆண்டுகளை கடந்த குளங்கள், கடல்போல் காட்சி அளிக்கும் சமுத்திரம் ஏரி போன்றவற்றை சீரமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் தஞ்சை பெரியகோவிலை சுற்றி பூங்காக்கள், சோழர்களின் சரித்திரத்தை வெளிப்படுத்திடும் வகையில் திரையரங்கம் அமைக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த தருணத்தில் மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க நிதிஒதுக்க வேண்டும். அப்படி செய்தால் மாநில தரவரிசை பட்டியலில் தஞ்சை முதலிடம் பிடிக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story