மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது சேலத்தில் கே.வி.தங்கபாலு பேட்டி


மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது சேலத்தில் கே.வி.தங்கபாலு பேட்டி
x
தினத்தந்தி 23 Nov 2019 11:00 PM GMT (Updated: 23 Nov 2019 8:16 PM GMT)

மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது என சேலத்தில் கே.வி.தங்கபாலு கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவர் ஜெயபிரகா‌‌ஷ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி, மேற்கு மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, செயல் தலைவர் ஜெயக்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு நாட்டின் பொருளாதார சீரழிவு குறித்து பேசினர்.

வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார சீரழிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் மேகநாதன், சேவாதள மாநில செயலாளர் சஞ்சய் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா ஆட்சி

முடிவில் கே.வி.தங்கபாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது நாட்டின் உற்பத்தி திறன் வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. தற்போது பா.ஜனதா ஆட்சியில் அது 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்து மந்த நிலை ஏற்பட்டு உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தை பற்றி அதிகம் படிக்க வேண்டும்.

காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் நாட்டின் நலன் கருதியே பொருளாதார மந்த நிலையை போக்க மத்திய அரசுக்கு ஆலோசனை கூறி வருகிறோம். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால் பொருளாதாரம் சீரடையும். மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி நீடிக்காது. இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்து விடும். கோவா உள்ளிட்ட மாநிலங்களில் எப்படி ஆட்சி அமைத்தார்களோ? அதே நிலையை பின்பற்றி இருக்கிறார்கள். இருந்தாலும் ஜனநாயகத்தை காக்க தொடர்ந்து காங்கிரஸ் கட்சி போராடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story