தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரியில் தலைமை செயலாளர் ஆய்வு வேளாண்மை சார்ந்த பணிகளை பார்வையிட்டார்


தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரியில் தலைமை செயலாளர் ஆய்வு வேளாண்மை சார்ந்த பணிகளை பார்வையிட்டார்
x
தினத்தந்தி 24 Nov 2019 11:00 PM GMT (Updated: 24 Nov 2019 8:43 PM GMT)

தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரியில் தலைமை செயலாளர் க.சண்முகம் வேளாண்மை சார்ந்த பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், தர்மபுரி அன்னசாகரம் ஏரியில் ரூ.70 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிமராமத்து பணிகள், நூல அள்ளி கிராமத்தில் நுண்ணீர் பாசனத்தில் துவரை விதைப்பண்ணை வயல், வத்தல்மலை தாவரவியல் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் புதிய தடுப்பணைகள் பண்ணைக்குட்டைகள் அமையவுள்ள இடங்களை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மைத் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத்துறை மற்றும் மலை பயிர்கள் துறை இயக்குனர் என்.சுப்பையன், கலெக்டர் எஸ்.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய திட்டம்

5, 6 ஆண்டுகளுக்கு முன்பு வத்தல்மலையை சுற்றுலா தலமாக மாற்ற, அம்மலைக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. தற்போது, நேரில் ஆய்வு செய்து இப்பணிகளை முழுமையாக நிறைவேற்றி வத்தல்மலையை இயற்கை சூழல் சுற்றுலா தலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களின் பண்ணை சார்ந்த வளர்ச்சி திட்டம் என்ற புதிய திட்டம் வத்தல்மலையில் தொடங்கப்பட்டுள்ளது. வத்தல்மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வத்தல்மலையில் அமைக்கப்பட்டுள்ள சாலை மழைக் காலங்களில் சரிந்து விழுகிறது. இதை சீரமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். வத்தல்மலையில் உள்ள அனைத்து குக்கிராமங்களையும் ஒரே ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரிய நேரத்தில் அரசு பரிசீலிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிரு‌‌ஷ்ணகிரியில்...

தர்மபுரியை தொடர்ந்து, கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ரூ.50 கோடி மதிப்பில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் காய்கறி, பழங்கள் தொடர் வினியோக மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையம் மற்றும் கட்டுமான பணிகளை தலைமை செயலாளர் க.சண்முகம் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Next Story