குடிநீர் பஞ்சத்தை தீர்க்க கிணறு வெட்ட அனுமதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


குடிநீர் பஞ்சத்தை தீர்க்க கிணறு வெட்ட அனுமதி கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 25 Nov 2019 11:00 PM GMT (Updated: 25 Nov 2019 3:47 PM GMT)

குடிநீர் பஞ்சத்தை தீர்க்க கிணறு வெட்ட அனுமதி தரக்கோரி பெரம்பலூர் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வாங்கினார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா காரியானூர் கிராமத்தில் உள்ள ஜெயந்தி காலனியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் வசிக்கும் காலனியில் குடிநீர் பஞ்சத்தை தீர்க்க புதிதாக கிணறு வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் சுமார் 50 ஆண்டுகாலமாக மயானமாக பயன்படுத்தி வந்த இடத்தின் ஒரு பகுதியில் கிணறு வெட்ட உத்தேசித்துள்ளோம். ஆனால் அந்த இடம் வனப்பகுதிக்கு சொந்தமான பகுதி என்றும், வனத்துறையினர் கிணறு வெட்டக்கூடாது என்றும் கூறிவருகிறார்கள். எனவே குடிநீர் பஞ்சத்தை தீர்க்க அந்த இடத்தில் கிணறு வெட்ட கலெக்டர் அனுமதி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அரசு வேலை

இதேபோல் செவிலியர் உதவியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் சுரே‌‌ஷ்ராஜா தலைமையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்த பெண்கள் கொடுத்த மனுவில், நாங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக மாநில அரசு அங்கீகாரம் அல்லாத தனியார் பாராமெடிக்கல் பயிற்சி பள்ளியில் செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்து தற்போது வேலை ஏதும் இல்லாமல் இருக்கிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்களின் குடும்ப சூழ்நிலையை கருதி கிராமப்புற சுகாதார செவிலியர்கள் பணி அல்லது ஏதாவது அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையத்தை சேர்ந்த மருதை மனைவி பாப்பாத்தி (வயது 65) கொடுத்த மனுவில், எனக்கு துறைமங்கலம் பகுதியில் சொந்தமான விளை நிலம் உள்ளது. இந்நிலையில் கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி விளை நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளேன். நெற்பயிருக்கு உரம், பூச்சி மருந்து பெரம்பலூரில் உள்ள தனியார் மருந்து கடையில் வாங்கி அடித்தேன். இதனால் நெற்பயிர் வளராமல் அழிந்து விட்டது. எனவே நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தொழில் தொடங்க திருநங்கைகளுக்கு மானியம்

இதேபோல் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 313 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தா, மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் சுயதொழில் தொடங்குவதற்காக 10 திருநங்கைகளுக்கு மானியமாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். அப்போது திருநங்கைகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் தெய்வநாயகி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மஞ்சுளா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story