கடலூரில், ரூ.2 கோடியில் கட்டப்பட்ட, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


கடலூரில், ரூ.2 கோடியில் கட்டப்பட்ட, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 25 Nov 2019 11:00 PM GMT (Updated: 25 Nov 2019 5:41 PM GMT)

கடலூரில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

கடலூர்,

சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்பில் அரசு சார்பில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தின் உள்ளே அவரது 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, மணிமண்டபத்தை திறந்துவைத்தார். இதனை தொடர்ந்து அவரும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் முழுஉருவ சிலைக்கும், உருவபடத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இருவரும் மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.

இந்த விழாவில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், சி.வி.சண்முகம், வீரமணி, கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, ஓ.எஸ்.மணியன், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

வாழும் போதே வரலாறாக வாழ்ந்த ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் அமைத்து, அதன் திறப்பு விழாவில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். விடுதலை போராட்ட தியாக சீலர்களில் ஒருவர் ராமசாமி படையாச்சியார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நாடு விடுதலை பெற அரும்பாடு பட்டவர். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனினும் முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டவர் ராமசாமி படையாச்சியார். 1954-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பணியாற்றியவர்.

நகைச்சுவையாகவும், தன்னுடைய கருத்தை ஆணித்தரமாகவும் பேசக்கூடியவர். தன்மானத்தை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்காமல் அஞ்சாமல் பேசுபவர். சொன்னதை செய்தார். செய்ய முடியும் என்பதை மட்டுமே சொன்னார்.

கடலூரில் ரெயில் பாதை, பஸ் நிலையம், மருத்துவமனை, அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க தனது நிலத்தை தானமாக கொடுத்தவர். அவரது சந்ததியினரும் நிறைய செய்கிறார்கள். தற்போது உள்ள பஸ் நிலையத்துக்கு தகுந்த வழியில்லாத காரணத்தினால் ரூ.20 கோடி நிலத்தை தானமாக வழங்கி உள்ளனர். இது பெருமையாக இருக்கிறது.

வன்னியர் குல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஓராசிரியர் வேலை என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவர் ஆற்றிய பணிகளை சிறப்பிக்கும் வகையில், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறோம். ராமசாமி படையாச்சியாரை மேலும் சிறப்பிக்கும் வகையில் சட்டமன்றத்தில் அவரது முழுஉருவ படம் என்னால் திறந்து வைக்கப்பட்டது.

அமைச்சர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கேட்டு கொண்டதற்கு இணங்க, அவர் பிறந்த கடலூரில் மணி மண்டபமும், அதில் அவரது முழுஉருவ சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை தொடர்ந்து செய்திட சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா. 1993-ம் ஆண்டு சட்டமேற்றிய அரசியலமைப்பு சட்டத்தில் 9-வது அட்டவணையில் சேர்த்து அரசிதழில் பாதுகாப்பு பெற்று தந்தவர்.

சமூக நீதிக்கு ஆபத்து வரும் போதெல்லாம் அதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து, அதனை களைய உரிய நடவடிக்கை எடுத்து வரும் அரசு ஜெயலலிதாவின் அரசு. வாக்குறுதி கொடுத்ததோடு மட்டும் நிற்காமல் அதை உடனடியாக நிறைவேற்றும் ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறேன்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்ற நாங்களும் சொல்வதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கை அரசு பரிசீலனையில் உள்ளது. இந்த அரசு நிச்சயம் இந்த சமுதாய மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story