கொடுங்கையூரில், தனியார் கம்பெனிகளில் தீ விபத்து - ரூ.1 கோடி பொருட்கள் சேதம்


கொடுங்கையூரில், தனியார் கம்பெனிகளில் தீ விபத்து - ரூ.1 கோடி பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 26 Nov 2019 10:45 PM GMT (Updated: 26 Nov 2019 5:35 PM GMT)

கொடுங்கையூரில் தனியார் கம்பெனிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் சிட்கோ நகரில் 50-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலை கள், கம்பெனிகள் உள்ளன. இங்குள்ள 4-வது பிரதான சாலையில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வர்தமான் (வயது 35) என்பவர் ரெடிமேடு ஆடைகளுக்கு பட்டன் தயாரிக்கும் கம்பெனியும், வினோத் (55) பிளாஸ்டிக் குழாய் தயாரிக்கும் கம்பெனியும் நடத்தி வருகின்றனர்.

அதன் மாடியில் சாதிக் (35) என்பவரின் மரக்கட்டில், மேசை தயாரிக்கும் கம்பெனியும், சசிகுமார் (40) என்பவர் திருமணத்துக்கு தேவையான பாத்திரங்கள் வைக்கும் குடோனும் வைத்து இருந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த வளாகத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, வர்தமான் உள்பட 4 பேரின் கம்பெனிகள் மற்றும் குடோனில் தீப்பிடித்து எரிவது தெரிந்தது. இதுபற்றி சென்னை வடக்கு மண்டல தீயணைப்புத்துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை, பெரம்பூர், எஸ்பிளனேடு, கோட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்களில் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத் துக்கு வந்து தீயை அணைக்க முயன்றனர், தண்ணீர் தீர்ந்துபோனதால் மெட்ரோ குடிநீர் லாரிகள் மூலம் 20 லாரி தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒரே வளாகத்தில் 3 கம்பெனிகள், ஒரு குடோனில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்ததால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின்போது கேட்டரிங் குடோனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடிக்கவோ, கியாஸ் கசிவோ ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து கொண்டதால் அந்த பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்காண காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story